கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கையில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் மீட்கப்பட்ட மனித எச்சம் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் படைப் பிரிவான சோதியா படையணியைச் சேர்ந்த மூத்த பெண் போராளி ஒருவருடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ன நீதவான் முன்னிலையில் இன்று முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் போது துப்பாக்கிகள் மூன்று, மகசீன்கள் எட்டு, அவற்றுக்குரிய சன்னங்கள், கைக்குண்டுகள் 2 என்பன மீட்கப்பட்டிருந்தன.
இதன் போது பெண்களின் ஆடைகளுடன் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூட்டு எச்சம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.அந்த எலும்புக்கூட்டு எச்சத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் காணப்பட்டதாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அதேவேளை அந்த எலும்புக்கூட்டு எச்சத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்ற தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தகட்டில் “த வி பு - ஞா - 0164” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் போராளிகளைக் கேட்டபோது,
குறித்த இலக்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவான சோதியா படையணியினர் பயன்படுத்தும் இலக்கம் என்று தெரிவிக்கின்றனர். இதேவேளை தொடர் இலக்கம் 0164 ஆக காணப்படுவதால் அவர் குறித்த பிரிவினரின் மூத்த போராளியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் எதிர்வரும் 02ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி